Publish Date: Wed, 04 Jul 2018 (08:12 IST)
Updated Date: Wed, 04 Jul 2018 (08:22 IST)
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது இவரது தலைமையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி முடிந்து இன்னும் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் இருந்தது.
இதனிடையே, கடந்த மாதம் 14-ந்தேதி 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை கூறியதால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. முதலில் மூன்றாம் நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்ட நிலையில், பின்னர் உச்சநீதிமன்றம் சத்தியநாராயணனை மூன்றாவது நீதிபதியாக நியமித்தது.
இந்நிலையில் இதன் விசாரணை மூன்றாவது நீதிபதி தலைமையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.