Publish Date: Fri, 24 May 2024 (11:40 IST)
Updated Date: Fri, 24 May 2024 (11:42 IST)
10-ம் வகுப்பு படிக்கும் மாணவரின் மாற்று சான்றிதழில் பெண் குழந்தையின் புகைப்படம் இருப்பதை பார்த்து அந்த மாணவர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முகமது இர்பான் என்ற 15 வயது மாணவர் புதுப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற நிலையில் அவர் பிளஸ் ஒன் படிப்பதற்காக மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழை வாங்கினார்.
அப்போது அவர் தனது மாற்றுச் சான்றிதழை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அதில் தன்னுடைய புகைப்படத்திற்கு பதிலாக பெண் குழந்தையின் புகைப்படம் இருந்தது. இதனை அடுத்து அந்த மாணவர் தனது பெற்றோருடன் சென்று பள்ளி அலுவலக ஊழியர் இடம் காண்பித்து விளக்கம் கேட்டபோது அந்த சான்றிதழை பிடுங்கி கிழித்து குப்பை தொட்டியில் போட்டதாக தெரிகிறது.
இதனால் மாணவரின் பெற்றோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஆன்லைனில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த தவறு நடந்து விட்டதாகவும் வேறொரு மாற்றுச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினர்.
இதை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர் கிழித்து குப்பையில் இருந்த மாற்று சான்றிதழை சேகரித்து கல்வித்துறை கல்வித்துறையில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.