Publish Date: Thu, 02 Apr 2015 (12:01 IST)
Updated Date: Thu, 02 Apr 2015 (12:14 IST)
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்த சிக்காலி கிராமத்தில் வாழும் மக்கள், அரக்கனான ராவணன், இந்த கிராமத்திற்கு நல்லதை செய்வார் என்று நம்புகின்றனர்.
அவர்களது வழக்கப்படி, நவராத்திரியின் 10ம் நாள் (நாம் விஜயதசமி என்று கொண்டாடுகிறோம்) ராவணனை வழிபடுகின்றனர். ராவணனை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. ராமருக்கும், ராவணனுக்கும் போர் நடக்கிறது. இந்த நிகழ்ச்சி அங்கு மிகவும் பிரபலமானதாகும். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.
ராவணன் கோயிலின் பூசாரி பாபுபாய் ராவண் தான் ராவணனுக்கான அனைத்து பூஜைகளையும் செய்கிறார். அக்கிராமத்தில் எந்தவிதமான பிரச்சினை வந்தாலும் மக்கள் உடனே பாபுபாய் ராவணனிடம் செல்கின்றனர். உடனே ராவணனின் திருவுருவச் சிலை முன்பு அமர்ந்து விரதமிருக்கும் பாபுபாய், பிரச்சினை தீர்ந்த பின்னர்தான் தனது விரதத்தை முடிக்கிறார்.
ஒரு முறை அந்த கிராமம் மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. உடனே பாபுபாய் விரதமிருக்கத் துவங்கினார். என்ன அதிசயம் 3 நாட்களில் பேய் மழை பெய்து ஊரணிகள் நிரம்பி வழிந்தன.
இது குறித்து கைலாஷ் நாராயணண் வியாஸ் கூறுகையில், பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் வாழும் மக்கள் ராவணனை மட்டுமே வழிபட்டு வந்தனர். ஒரு முறை பல்வேறு காரணங்களினால் நவராத்திரி தசமி அன்று ராவணனுக்கான சிறப்பு பூஜைகள் செய்ய முடியாமல் போயிற்று. அப்போது அந்த கிராமமே தீக்கிரையாயின். அந்த கிராமத்தில் இருந்த ஒரு வீட்டைத் தவிர வேறு எதையும் தீயிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் போயிற்று என்றார்.
அந்த கிராமத்தில் வாழும் பத்மா என்ற பெண்மணி பேசுகையில், இந்தியாவில் ராவணனை வழிபடுவது ஒன்றும் புதிதில்லை. பல்வேறு பகுதி மக்களும் வழிபட்டுத்தான் வருகின்றனர். நமது அண்டை நாடான இலங்கையில் ராவணனுக்கு கோயில்களே உள்ளன என்கிறார்.
இவையெல்லாம் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதற்கான உதாரணமா அல்லது வெறும் மூட நம்பிக்கையா? நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? எங்களுக்கு எழுதுங்கள்