Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரத ஜன‌ங்க‌ளி‌ன் த‌ற்கால ‌நிலைமை

பாரத ஜன‌ங்க‌ளி‌ன் த‌ற்கால ‌நிலைமை
, சனி, 11 டிசம்பர் 2010 (14:15 IST)
(நொ‌ண்டி‌ச் ‌சி‌ந்து)

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்;
துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்.

மந்திர வாதி என்பார் - சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்;
யந்திர சூனியங்கள் - இன்னும்
எத்தனை ஆயிரம் இவர்துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே - ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்;
அந்த அரசியலை - இவர்
அஞ்சதரு பேயென் றெண்ணி நெஞ்சம் அயர்வார்

சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்;
துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்;
அப்பால் எவனோ செல்வான் - அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற்பார்;
எப்போதும் கைகட்டுவார் - இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார்

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட் டால்,
கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
கோடிஎன் றால்அது பெரிதா மோ?
ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்
நெஞ்சு பிரிந்திடு வார் - பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.

சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்;
ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்
அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார்.

நெஞ்சு பொறுக்கு திலையே - இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலைய;
கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்து‌த்
துஞ்சி மடிக்கின் றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே

எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்;
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார

Share this Story:

Follow Webdunia tamil