டாமாஸ் டார்ன்யி
தலைசிறந்த பன்முக நீச்சல் வீரர்!
பனிக்கட்டி கண்ணைத் தாக்கியதனால் 15 வயதில் இடது கண் பார்வையை இழந்த டாமாஸ் டார்ன்யி, ஒலிம்பிக் போட்டிகள் கண்ட ஈடிணையற்ற நீச்சல் வீரர் ஆவார்.
நீச்சல் போட்டிகளில் ஃபிரீ ஸ்டைல், பிரஸ்ட் ஸ்ட்ரோக், பட்டர்ஃபிளை, பேக் ஸ்ட்ரோக் ஆகீய 4 வகை நீச்சல் முறைகளிலும் திறமை வாய்ந்தவராகத் திகழ்ந்த வீரர் டாமாஸ் டார்ன்யி போல எவரும் இல்லை என்றே கூறலாம்.
1988 ஆம் ஆண்டு சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் மெட்லியில் (4 வகை நீச்சல் முறைகளிலும் அடுத்தடுத்து நீந்தும் போட்டி) உலக சாதனையாளராக களமிறங்கிய டார்ன்யி, தங்கங்களை வென்றது மட்டுமின்றி, தான் உருவாக்கிய சாதனைகளை முறியடித்து புதிய உலக சாதனைகளை ஏற்படுத்தினார்.
பார்சிலோனாவில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் இவ்விரு போட்டிகளிலும் களமிறங்கி தனது ஆதிக்கத்தை நிலைப்படுத்திய டார்ன்யி, 8 ஆண்டுக் காலத்திற்கு உலகின் தலைசிறந்த பன்முக நீச்சல் வீரராகத் திகழ்ந்தார்.
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த இந்த வீரர் 1986 முதல் 1991 ஆம் ஆண்டு வரை நடந்த உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.