அயல்நாடு வாழ் (இந்தியர்) கணவர்களால் கைவிடப்படும் (இந்தியப்) பெண்களுக்கு நீதி கிடைக்கச் சட்ட உதவி வழங்குவதுடன், அவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியையும் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள் உரிமைக்கான நாடாளுமன்றக் குழு வழங்கிய பரிந்துரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மொத்தம் 30 உறுப்பினர்களைக் கொண்ட பெண்கள் உரிமைக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் கிருஷ்ணா திராத் பேசுகையில், அயல்நாடு வாழ் கணவர்களால் கைவிடப்படும் பெண்களுக்கு நீதியும், நிதியுதவியும் கிடைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களது பரிந்துரையில் மீண்டும் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
அயல்நாடு வாழ் இந்தியக் கணவர்களால் கைவிடப்படும் அல்லது விவாகரத்து செய்யப்படும் பெண்களுக்கு அந்நாட்டில் உள்ள இந்திய சேவை நிறுவனங்களால் அதிகபட்சமாக ஆயிரம் டாலர் மட்டுமே நிதியுதவியாக வழங்கப்படுகிறது. அப்பெண்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்த நிதி போதுமானதாக இல்லை என்பதால் அதனை உயர்த்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இத்திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை அரசு ரூ.31.70 கோடியாக (2007-08 முதல் 2011-12ஆம் கால கட்டம் வரையிலான ஐந்தாண்டிற்கு) உயர்த்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று அக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அயல்நாடு வாழ் இந்தியர் திருமணங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாமல் இருப்பதும் பிரச்சனைக்குரியது. எனவே அயல்நாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சகம் (Ministry for overseas Indian Affairs), பல்வேறு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என அக்குழு வலியுறுத்தியுள்ளது.
எனினும், இந்தியாவில் இருந்து அயல்நாடுகளுக்கு சென்றவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அயல்நாடுகளில், குறிப்பாக வாஷிங்டன், கோலாலம்பூர் ஆகிய நகரங்களில் இந்திய மையங்களை அமைப்பது குறித்த திட்டத்தை வெளியிட்ட மத்திய அரசு, அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அயல்நாடுவாழ் இந்திய கணவர்களால் பாதிக்கப்படும் பெண்கள் அதிகளவில் உள்ள நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், சேவை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சிறப்பு மையங்களை பாதிக்கப்பட்ட பெண்களின் உதவிக்காக அயலுறவு அமைச்சகம் நிறுவ வேண்டும் என இக்குழு முன்பே வலியுறுத்தி இருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.
அயல்நாடுவாழ் இந்தியர்களை மணம் புரியும் பெண்கள் தங்கள் திருமணத்தை விரைவில் பதிவு செய்ய வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசித்த வருகிறது. எனினும், இக்குழு சமர்ப்பித்த அறிக்கையை மசோதாவாக தாக்கல் செய்வதற்கு முன்னர் அதுகுறித்து தீவிரமாக ஆராயப்படும் எனத் தெரிகிறது.
இதற்கிடையில், திருமணத்தை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்த விரைவாக அமல்படுத்த வேண்டும் என பெண்கள் உரிமைக்கான நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.