தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக இந்தியர்கள் குடியேறியதன் 150-வது ஆண்டு விழா அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்தியர்கள் தென்னாப்ரிக்காவில் குடியேறி 150 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பாக கொண்டாடுவதற்காக தென்னாப்பிரிக்க இந்திய கலாசார மத மற்றும் அரசியல் தலைவர்கள் ஒரு ஐக்கிய அணியை அமைத்து உள்ளனர்.
விழாவை வடிவமைப்பதற்காக ஒரு நிர்வாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் தென்னாப்பிரிக்க இந்து மகாசபா தலைவர் அஷ்வின் டிரிகாம்ஜி, தென்னாப்பிரிக்க தமிழர் கூட்டமைப்பு தலைவர் மிக்கி செட்டி, ஜுமா மசூதியின் தலைமை அறங்காவலர் அகமது வாலி முகமது குவாசுலு நேட்டால், கிறிஸ்தவ கவுன்சில் தலைவர் பிஷப் ரூபின் பிலிப் ஆகியோர் இதில் இடம் பெற்று உள்ளனர்.
இந்த விழாவுக்கு நடிகர் அமிதாப்பச்சன், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் தற்போது 12 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.