மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீக்கியரின் தாடியை அகற்றியதற்காக, அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தருகிறது மருத்துவமனை.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசித்தவர் இந்திய வம்சாவளி சீக்கியர் பியாரா சிங் சஹான்ஸ்ரா. உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் அங்கு உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவர் குடும்பத்தினர் மருத்துவ நிர்வாகத்திடம் தங்கள் மத வழக்கப்படி தலைமுடி, தாடி, மீசை ஆகியவற்றை அகற்றக்கூடாது என்று முன்கூட்டியே தெரிவித்து அவர்களின் கையெழுத்தை வாங்கி விட்டனர்.
கடந்த 2007-ம் ஆண்டு முதல் அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், புதியதாக வந்த செவிலியர் ஒருவர், விவரம் அறியாமல் பியாராசிங்கின் தாடியை அகற்றி விட்டார்.
இந்த சம்பவம் நடந்த ஒரு மாதத்தில் பியாரா சிங் இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து அவர் குடும்பத்தினர் மருத்துவ நிர்வாகம் மீது வழக்கு தொடரப்போவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகம் பியாரா சிங் குடும்பத்தினருடன் சுமூகமாகப் பேசி இழப்பீடாக ரூ.10 லட்சம் கொடுக்க முன்வந்தது.