அமெரிக்காவில் படித்துக் கொண்டே, பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றும் மாணவன், அமெரிக்கர் ஒருவரின் கொடூரச் செயலால் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் கடியாலா முரளி கிருஷ்ணா. 25 வயதான கடியாலா, அமெரிக்காவில் மிசிசிபி மாகாணத்தில் உள்ள தெற்கு மிசிசிபி பல்கலைக்கழத்தில் எம்.எஸ்.(கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்து வருகிறார். தனது செலவுகளுக்காக அங்குள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்த கறுப்பின அமெரிக்கர் ஒருவர், அங்குள்ள மதுபான கடையில் ஒரு பாட்டில் மதுபானம் வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் காரில் ஏறினார். உடனே முரளி கிருஷ்ணா அவரிடம் சென்று பணம் கேட்டார்.
பணம் கொடுக்க மறுத்த அந்த அமெரிக்கர், முரளி கிருஷ்ணாவை தாக்கிவிட்டு, வேகமாக காரின் கதவை சாத்தினார். அப்போது, முரளி கிருஷ்ணாவின் உடை காரின் கதவில் சிக்கிக் கொண்டது. என்றாலும் அதை பொருட்படுத்தாமல், அந்த அமெரிக்கர் காரை வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் முரளி கிருஷ்ணாவை கார் இழுத்துச் சென்றது. அவர் வலியால் கதறித் துடித்து கூச்சல் போட்டார்.
அப்போது அந்த வழியாக வந்த காவலர்கள், இந்த கொடூரத்தை பார்த்து காரை தடுத்து நிறுத்தினார்கள். கார் தரதரவென இழுத்துச் சென்றதில் முரளி கிருஷ்ணா படுகாயம் அடைந்தார். உடனடியான அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும், குண்டூரில் இருந்து முரளி கிருஷ்ணாவின் தாயார் அமெரிக்கா விரைந்தார்.