வசந்தத்தை வரவழைக்கும் மகாலட்சுமி
, செவ்வாய், 22 செப்டம்பர் 2009 (12:14 IST)
சூலமும், வாளும் கைகளில் ஏந்தி துர்கையாக மாறும் சக்தி ஞாலமும், சீலமும் போற்றுகின்ற அளவிற்கு செல்வத்தை வழங்கும் ஸ்ரீதேவியாக மாறுவதுதான் நான்காவது நாளான இன்றைய சிறப்பாகும்.இன்றைய தினம் அஷ்ட லட்சுமிகளையும் மிக அழகாக அலங்கரிக்க வேண்டும். மஹிஷாசுரனை வதம் செய்த சண்டிகா தேவியை தேவர்களும், முனிவர்களும் தோத்திரம் செய்ய பராசக்தி லட்சுமி துர்கையாக சிம்மாசனத்தில் அமர்ந்து அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். உலகைக் காக்கும் அன்னையை சண்டிகா தேவி என்று குறிப்பிட்டு, தேவர்கள் அவளின் சௌந்தர்யத்தை தியானித்து இந்த உலகத்தைக் காக்க வேண்டுகின்றனர்.
பூரண சந்திரன் போல் முகம் கொண்ட சண்டிகா தேவியின் அழகையும், வீரத்தையும் வியந்து விண்ணிலும், மண்ணிலும் தென்படும் அழகுகளெல்லாம் அன்னையின் அணிகலன்களே என்றும் கூறி வேண்டுகின்றனர். இப்படியாக தேவர்களும், முனிவர்களும் போற்றித் துதி பாடுவதை சண்டிகா தேவியாகிய மகாலட்சுமி ஒரு மந்தகாசப் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருக்கும் நாள் இன்று.அம்பிகையின் பாடல்களை பைரவி ராகத்தில் பாட வேண்டும்.
மாலை 6 மணி முதல் இரவு 7 மணிக்குள் ஐந்து முக விளக்கேற்றி பூஜை செய்வது சிறந்தது.இன்று செவ்வாய்க்கிழமையாதலால் அம்பிகைக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்தல் சிறப்பு. செந்தாமரை, வெண்தாமரை, மல்லிகை மலர்களால் கட்டப்பட்ட மாலையை அணிவித்து அழகுப்படுத்தலாம்.நைவேத்தியமாக வெண் பொங்கல் படைக்கலாம். நல்ல சுகந்த மணமுள்ள மலர்களால் அர்ச்சிக்கவும்.
பலவிதக் காய்களும், பருப்பும் கலந்த கதம்ப சாதத்தை பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் பகை விலகும். எதிர்ப்புகள் அகலும். இன்னல்கள் தீர்ந்து இன்பம் சேரும்.