புரட்டாசி பிறந்தால் புது வாழ்வு அமையும் என்பது புதுமொழி. புரட்டாசி மாதம் 3ஆம் தேதி (செப்டம்பர் 19) சனிக்கிழமையில் நவராத்திரி விழா துவங்குகிறது.கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது இல்லத்தில் அம்பிகை வழிபாட்டை நடத்தினால் இல்லத்தில் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை.எனவே நவராத்திரியின் 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்பிகைக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இன்று மகேஸ்வரிக்கு உகந்த நாள்
கல்ப காலத்தின் இறுதியில் உலகத்தைப் பிரளயம் சூழ்ந்தது. மகா விஷ்ணு ஒரு சிறு குழந்தையாக சேஷசயனத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்திருக்க, மது கைடபர் என்ற இரு அரக்கர்கள் எக்களிப்பில் திருமாலின் உந்தியிலிருந்து உதித்த பிரமனுடன் போர் புரியத் தொடங்கினர்.
பிரமன் பராசக்தியை மகாதேவி மகாமாயை, மகா புத்தி, மகாவித்யை என்றெல்லாம் போற்றித் துதித்து இவ்விரு அசுரர்களை மயக்கி, உலகைக் காத்தருள வேண்டினார். அம்பிகை மகாவிஷ்ணுவின் யோக நித்திரையிலிருந்து வெளிப்பட்டு மது கைடபர்கள் இருவரையும் தம் தொடை மீதே வைத்து தனது சக்ராயுதத்தால் மகாவிஷ்ணு வதம் செய்யக் காரணமாக இருந்தார்.
இன்று சனிக்கிழமையாதலால் நீல வண்ணப் பட்டாடைகளையும், நீலம் கலந்த ஆரபணங்களையும் அணிவிக்கலாம்.
முல்லை, செவ்வந்தி, பாரிஜாத மலர்களை மாலையாக்கி அணிவிக்கலாம்.
இன்று எள் சாதம், எள் பாயாசம், வேர்க்கடலை சுண்டல் வைத்து பூஜை செய்யலாம். அதையே வருபவர்களுக்கும் பிரசாதமாக வழங்கலாம்.