இச்சா சக்தி, கிரியா சக்தியாக இருந்த தெய்வம் இப்பொழுது ஞான சக்தியாக மாறுகிறது. இதனை சரஸ்வதி பூஜையின் முதல் நாள் என்று அழைக்கலாம். நவராத்திரியின் 7ஆம் நாளான இன்று கொலு மண்டபத்தின் நடுவில் வீற்றிருக்கும் தேவியின் சிலையை துர்க்கையாக அலங்கரிக்க வேண்டும்.தூம்ரலோசனனும் கொல்லப்பட்டதை அறிந்த அசுரசக்ரவர்த்தியான சும்பன், சண்டமுண்டர்களை போருக்கு அனுப்பி வைத்தான். சிங்க வாகனத்தில் அமர்ந்திருந்த தேவி, சண்ட முண்டர்கள் படைகளுடன் போருக்கு வந்திருந்ததைப் பார்த்த பொழுது அவளது முகம் கோபத்தால் மை நிறமாகி, அவள் நெற்றியிலிருந்து பாசமும், கத்தியும் கொண்ட காளி தோன்றினாள்.
அசுரர்கள் விட்ட அஸ்திரங்களை காளி பொடிப் பொடியாக்கி விட்டாள். இந்த போரில் முதலில் சண்டன் பலியானான். பின்னால் வந்த முண்டனை காளி தன் குண்டாந்தடியால் அடித்து கொன்றாள். இவர்கள் இருவரின் தலைகளைக் கையில் ஏந்தி காளி சண்டிகா தேவியாகிய பத்ரகாளியிடம் வந்தாள். சாமுண்டி தேவி என்று புகழ் பெற்றாள்.
தேவியின் கழுத்தில் பூச்சரங்களும், மாணிக்கம், வைடூரியம் பதித்த நகைகளையும் அணிவிக்கலாம்.
இன்று ஒரு முறை செய்யும் வழிபாடு நூறு முறை செய்யும் வழிபாட்டிற்கு சமமாகும். சாம்பவி துர்கை அம்மனுக்கு உரிய பாடல்களை பிலகரி ராகத்தில் பாட வேண்டும்.
மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் கூட்டு பிரார்த்தனை செய்வது சிறந்தது.
இன்று வெண்பட்டும், சிவப்பு வண்ணம் கலந்த ஆடைகைளயும் அணிவிக்கலாம். மல்லிகை, முல்லை, ரோஜா மலர்களை மாலையாக்கி அணிவிக்கலாம்.
எலுமிச்சை சாதத்தை நைவேதியம் செய்யலாம். சுண்டல், அவல், பொரிகடலை, சர்க்கரை சேர்த்து கொலுவிற்கு வருபவர்களுக்குக் கொடுக்கலாம்.