டெல்லியில் சாலையின் நடுவே ஆபத்தான முறையில் பைக் ஓட்டிய இளைஞரை, போலீசார் கண்டுபிடித்து, அவருடைய பைக்கை பறிமுதல் செய்து, பழைய இரும்பு கடைக்கு 'பார்ட் பார்ட்டாக' பிரித்துப் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு டெல்லியில் யமுனா விகார் என்ற பகுதியை ஒரு இளைஞர், பைக்கில் பேருந்து முன்பு மிகவும் ஸ்டைலாக ஓட்டி வந்தார். அவர் பைக்கை ஓட்டிய விதத்தை பார்த்த பேருந்து டிரைவர் அதிர்ச்சி அடைந்து, "விபத்து ஏற்பட்டு விடுமோ?" என்ற அச்சத்திலேயே இருந்தார்.
பேருந்துக்கு வழி விடுவது போல, திடீரென பக்கவாட்டில் இளைஞர் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் வந்து, பேருந்தை பிடித்தபடி ஓட்டினார். இதனால் ஓட்டுனர் அச்சமடைந்தார். அந்தக் காட்சியின் வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த வீடியோவை பார்த்த டெல்லி காவல்துறையினர், அந்த பைக்கின் நம்பரை கொண்டு விசாரித்ததில், 13 ஆண்டுகளுக்கு முன்பே அந்த வாகனம் விற்கப்பட்டிருந்தும், பெயர் மாற்றாமல் இருந்தது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, 15 ஆண்டுகள் பழமையான வாகனம் என்பதால், அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, பார்ட் பார்ட்டாக பிரித்து, பழைய இரும்பு சாமான் கடைக்காக காவல்துறையினர் அனுப்பினர்.
மேலும், அந்த இளைஞரிடமும் தற்போது விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.