தோல்வி பயம் எதிரொலி : ராஜினாமா செய்தார் எடியூரப்பா
Publish Date: Sat, 19 May 2018 (16:04 IST)
Updated Date: Sat, 19 May 2018 (16:13 IST)
கர்நாடகாவில் பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா விலகினார்.
கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பது என்பதுதான் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது. முதல்வரை தேர்ந்தெடுக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை சரியாக 4 மணிக்கு தொடங்க இருந்தது.
அந்நிலையில், இன்று மாலை 3.15 மணியளவில் எடியூரப்பா சட்டசபையில் உரையாற்றத் தொடங்கினார். சுமார் 45 நிமிடங்கள் அவர் மிகவும் உருக்கமாக பேசினார். அதன்பின்பு, தான் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துவிட்டு அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார். பெரும்பான்மை இல்லாத காரணத்தால் நம்பிக்கை வாக்கெடுப்பை கோராமலேயே அவர் சோகமாக கிளம்பி சென்றார்.
இதன் மூலம், கர்நாடகாவில் யார் அமைட்சியில் அமரப்போகிறார் என கடந்த சில நாட்களாக இருந்த இழுபறி முடிவிற்கு வந்துள்ளது. எடியூரப்பா தோல்வி அடைந்ததால், காங்கிரஸ்-மாஜத கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்பதால், அவர்கள் ஏற்கனவே அறிவித்தபடி குமராசாமி முதல்வராவது உறுதியாகியுள்ளது.
விரைவில் குமரசாமிக்கு ஆளுநர் முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்