சரியாக காலை 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும் என்று தனது நிறுவனம் அனுப்பிய குறுஞ்செய்தியை பகிர்ந்த ரெடிட் பயனர் ஒருவர், கார்ப்பரேட் நிறுவனங்கள் பள்ளி குழந்தைகளை போல் ஊழியர்களை நடத்துவதாக கடுமையாக சாடியுள்ளார்.
ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர், தனது முதலாளி அனுப்பிய ஒரு செய்தியை ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "அனைத்து ஊழியர்களும் காலை 9:30 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். அதற்கு மேல் தாமதமாக வருபவர்களுக்கு அரை நாள் விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதமானால், முன்கூட்டியே மேலாளரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த செய்தியைப் பகிர்ந்த அந்த ஊழியர், "நாம் பள்ளியில் படிக்கிறோமா அல்லது பெரியவர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். "அவசரத் தேவைகள், போக்குவரத்து நெரிசல் போன்றவை வாழ்க்கையில் நடப்பது சகஜம். அப்படி இருக்கும்போது, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏன் 'சரியான நேரத்தில் வா அல்லது தண்டனையை எதிர்கொள்' என்ற பள்ளி மனப்பான்மையை இன்னும் பின்பற்றுகின்றன?" என்று அவர் கோபத்துடன் கேட்டுள்ளார்.
இந்த பதிவு வைரலானதை அடுத்து, பலர் தங்கள் நிறுவனங்களில் இதேபோன்ற அனுபவங்கள் நடப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.இதுபோன்ற கொள்கைகள் காரணமாகத்தான் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலர் உயிரிழக்கின்றனர்" என்றும், மற்றொரு பயனர், "இந்த மனப்பான்மை, கீழ்ப்படிதலை மட்டுமே உருவாக்கும், சிந்தனையாளர்களை உருவாக்காது. இந்த சிந்தனையுடன் நாம் சீனாவுடன் எப்படி போட்டியிட முடியும்?" என்றும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
வேலைக்கு வரும் நேரத்தைவிட, வேலையின் உற்பத்தித்திறனுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற விவாதம், இந்த சம்பவம் மூலம் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.