Publish Date: Thu, 06 Sep 2018 (14:10 IST)
Updated Date: Thu, 06 Sep 2018 (14:13 IST)
இயற்கை எது என்பதை நாம் தீர்மானிக்க கூடாது என்றும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக நடந்து வந்த நாம் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம், மேஜரான இரு நபர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என அதிரடியாக தீர்ப்பளைத்தது.
இதனை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2013 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் 377–வது சட்டப்பிரிவின் கீழ் சிறைத்தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்றும் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டப் பிரிவு 377 ரத்து செய்யப்படுகிறது எனவும் அதிரடியாக தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:-
இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல. சமுதாயம் மாறினால்தான் முன்னேற்றம் அடையும். மாற்றங்களை சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஓரினச்சேர்க்கையை குற்றம் என்பது பகுத்தறிவற்றது. அவர்களிடம் நாம் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த அளவுக்கு கஷ்டப்படுத்தி துன்புறுத்தி இருக்கிறோம். மற்ற குடிமகன்களுக்கு இருக்கும் உரிமை தன்பாலின உறவு கொள்பவர்களுக்கு உண்டு.