Publish Date: Thu, 11 Apr 2019 (20:35 IST)
Updated Date: Thu, 11 Apr 2019 (20:38 IST)
இந்தியாவில் மக்களவை தேர்தலின் முதல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய இன்று அதிகாலை முதலே வரிசையில் நின்றனர். இன்று மட்டும் மஹாராஷ்ட்ரா, அருணாச்சலப்பிரதேசம், அசாம், ஜம்மு காஷ்மீர் உள்பட 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளிலும், ஆந்திரா, சிக்கிம், ஒடிசா, அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது
இந்த நிலையில் ஆந்திராவின் பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென கோளாறானதால் வாக்காளர்கள் பலர் வாக்களிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இதுகுறித்து கடும் கண்டனங்களை பதிவு செய்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேர்தலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில் தொழில்நுட்ப அலுவலகர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு பழுந்தான வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிசெய்யும் முயற்சியில் இறங்கினர். சிலமணி நேரங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் சரியாகிவிட்ட நிலையில் பழுதான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரத்தை தேர்தல் அதிகாரிகள் நீட்டித்தனர். இதனையடுத்து இரவு எட்டு மணிக்கு மேலும் வாக்குச்சாவடி முன் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.