Publish Date: Tue, 12 Sep 2017 (16:19 IST)
Updated Date: Tue, 12 Sep 2017 (16:24 IST)
கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் ஒருவர், போலீசாருடன் செல்ல விருப்பம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர், தற்போது கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு மாறியுள்ளனர்.
அந்நிலையில், அந்த விடுதிக்கு இன்று தமிழக போலீசார் சென்றனர். எம்.எல்.ஏக்கள் சுய விருப்பத்தில் தங்கியிருக்கிறார்களா அல்லது கட்டாயத்தின் பேரில் தங்கியிருக்கிறார்களா என அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், விசாரணையில் போலீசாருடன் செல்ல ஒரு எம்.எல்.ஏ விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் யார் என்ற விபரத்தை போலீசார் இன்னும் கூறவில்லை.
இதன் மூலம், தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சுய விருப்பத்தின் பேரிலேயே விடுதியில் தங்கியுள்ளனர் என தினகரனால் நிரூபிக்க முடியாமல் சூழ்நிலை ஏற்படும். மேலும், அவரின் ஆதரவு எம்.எல்.ஏக்களின் ஒரு எண்ணிக்கை குறையும். அதோடு, வெளியேறும் அந்த எம்.எல்.ஏ எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவுவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இந்த விவகாரம், தினகரன் தரப்பிற்கு பெரும் சரிவாக அமையும் எனத் தெரிகிறது.
முதல்வரை மாற்றுவோம் அல்லது இந்த ஆட்சியை கலைப்போம் என தினகரன் நேற்று இரவு கூறியிருந்தார். இந்நிலையில்தான், தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு போலீசார் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.