Publish Date: Wed, 31 Aug 2022 (09:14 IST)
Updated Date: Wed, 31 Aug 2022 (09:17 IST)
இந்திய ரயில்வேயில் ரயிலில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து பின்னர் ரத்து செய்தால் ரத்து கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இந்திய ரயில்வேயின் ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் செயல்பட்டு வருகின்றன. ரயில் பயணம் செய்வோர் அவரவர் வசதிக்கேற்ப முதல் வகுப்பு, ஏசி படுக்கை, ஸ்லீப்பர் என முன்பதிவு செய்கின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரயில்களில் முதல் வகுப்பு, ஏசி படுக்கை போன்றவற்றில் முன்பதிவு செய்து பிறகு ரத்து செய்தால் ரத்து கட்டணத்திற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பொதுவாக ரயில் டிக்கெட் கேன்சல் செய்தால் கட்டிய தொகையிலிருந்து குறிப்பிட்ட தொகை ரத்து கட்டணமாக கணக்கிடப்பட்டு மீத தொகை வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இனி ரத்து கட்டணத்துடன் கூடுதலாக 5 சதவீதம் வாடிக்கையாளரின் டிக்கெட் முன்பதிவு கட்டணத்திலிருந்து கழிக்கப்படும். இது பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மேலும் விமானங்கள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் முன்பதிவு செய்து ரத்து செய்தால் 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.