Publish Date: Thu, 28 Jan 2021 (13:56 IST)
Updated Date: Thu, 28 Jan 2021 (13:59 IST)
திருப்பதி தேவதானத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு தினசரி அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு தரிசனத்திற்கான அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி விதிமுறைகளுக்கு உட்பட்டு சிறப்பு தரிசன கட்டணத்தின் அடிப்படையில் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனத்தில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பக்தர்களும், நன்கொடை மற்றும் விஐபி பக்தர்கள் தரிசனம் என மொத்தமாக நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் குவிந்து வரும் நிலையில் பலர் தரிசன அனுமதி கிடைக்காமல் ஏமாந்து போகும் சூழலும் உள்ளது. இதை கருத்தில் கொண்டுள்ள திருப்பதி தேவஸ்தான் இலவச தரிசனத்திற்கான அனுமதியை 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. இதனால் மக்கள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.