பெங்களூர் அருகே நடைபெற்ற திருவிழா ஒன்றில் 150 அடி உயரமான தேர் சரிந்து விழுந்து பக்தர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே ஹூஸ்கூரு பகுதியில் பிரபலமான மத்தூரம்மா அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் 150 அடி உயரமான தேரை வடம்பிடித்து இழுக்கும் தேர்த் திருவிழா நேற்று நடைபெற்றுள்ளது.
பக்தர்கள் தேரை இழுத்துக் கொண்டு கட்டஹள்ளி கிராமம் அருகே வந்துக் கொண்டிருந்தபோது திடீரென தேர் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் தேரின் அடியில் பலர் சிக்கிக் கொண்ட நிலையில் வீடுகள் பலவும் சேதமடைந்தன. உடனடியாக மீட்பு பணிகள் நடைபெற்று காயம்பட்ட பக்தர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த தேர் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவரான லோகித் என்பவர் பரிதாபமாக பலியானார். மேலும் கொங்கேரியை சேர்ந்த ஜோதி என்பவரும் உயிரிழந்தார். கடந்த ஆண்டும் இதே திருவிழாவில் தேர் சாய்ந்து இருவர் பலியான நிலையில் இந்த ஆண்டும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K