உலகின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் நடத்தி வரும் ஸ்டார்லிங்க் என்ற நிறுவனத்தின் சார்பில், உலகின் பல்வேறு நாடுகளுக்கு இணையதள சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடான் நாட்டில் ஸ்டார்லிங்க் இணைய சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூடான் நாட்டில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பூடான் மக்கள் வேகமான இணையதள சேவையை அனுபவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பூடான் நாட்டில் தொடங்கப்பட்டுள்ள ஸ்டார்லிங் சேவை 25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகம் கொண்டது. அதேபோல், 5 Mbps முதல் 10 Mbps வரை பதிவேற்ற வேகம் கொண்டது ஆகும். அன்லிமிடெட் டேட்டா கொண்ட இந்த சேவைக்கு கட்டணமாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4,167 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவிலும் விரைவில் ஸ்டார்லிங் இணைய சேவை தொடங்க மத்திய அரசு உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்டார்லிங் சேவைகளை அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் சில பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்க ஸ்டார்லிங்க் நிறுவனம் தாமதம் செய்வதால் தான் ஸ்டார்லிங்க் சேவைக்கான ஒப்புதல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விரைவில் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து, இந்தியாவிலும் ஸ்டார்லிங்க் சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.