அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில் அந்த விமானத்தில் பயணித்திருந்த பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 242 பேரை சுமந்துக் கொண்டு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் 170 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் சற்று நேரம் முன்னதாக பயணித்திருந்த பயணி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
டெல்லியில் இருந்து அகமதாபாத் வந்த ஏர் இந்தியா போயிங் 787 விமானம் அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு லண்டன் புறப்பட்டது. இந்த விமானத்தில் டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு ஆகாஷ் என்ற நபர் பயணித்துள்ளார்.
அப்போது அவர் விமானத்தில் தொடுதிரை சரியாக வேலை செய்யாதது, ஏசி வொர்க் ஆகாதது உள்ளிட்டவற்றை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில், இந்த விமானத்தில் ஏதோ வழக்கத்திற்கு மாறான சூழல் நிலவுவதாக பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்த அவரது பதிவில் “AMD-யிலிருந்து புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு நான் அதே மோசமான விமானத்தில் இருந்தேன். நான் DEL-AMD-யிலிருந்து இதில் வந்தேன். அந்த இடத்தில் அசாதாரணமான விஷயங்களைக் கவனித்தேன். airindiaக்கு ட்வீட் செய்ய ஒரு வீடியோவை உருவாக்கினேன். கூடுதல் விவரங்களைத் தர விரும்புகிறேன்.” என கூறியுள்ளார். தற்போது விபத்தான அந்த விமானம் குறித்த பயணியின் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
Edit by Prasanth.K