ஜெயலலிதா பற்றி தவறாக பேசக்கூடாது : கன்னடர்களுக்கு குட்டு வைத்த சிவராஜ்குமார்
ஜெயலலிதா பற்றி தவறாக பேசக்கூடாது : கன்னடர்களுக்கு குட்டு வைத்த சிவராஜ்குமார்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி தவறாக பேசக்கூடாது என்று கன்னட நடிகர் சிவராஜ்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று பல கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கள் பங்குக்கு கன்னட நடிகர்களும் களத்தில் குதித்துள்ளனர்.
கன்னட சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி இன்று பெங்களூரில் உள்ள கன்னட திரைப்பட வர்த்தக சபை அருகேயுள்ள சிவானந்தா சர்க்கிளில் நடைபெற்றது. அதில் கன்னட முன்னனி நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.
அந்த கண்டன கூட்டத்தில் பேசிய பலரும் தமிழக அரசையும், ஜெயலலிதாவையும் இகழ்ந்து பேசினர். அதன்பின் நடிகர் ராஜ்குமாரின் மகனும், கன்னட சூப்பர்ஸ்டாருமான சிவராஜ்குமார் பேசினார். அவர் பேசும் போது “ எந்த ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெண் என்பவர் பெண்தான். எனவே யாரும் அவரை தரக்குறைவாக பேசக்கூடாது. தமிழ்நாடு வேறு நாடு இல்லை. நமது பக்கத்து மாநிலம்தான். கர்நாடகாவை போன்றே, தமிழகத்திலும் விவசாயிகள் உள்ளனர்.
ஒரு விவசாயின் துயரம் மற்ற விவசாயிக்கு தெரியும். எனவே இரு தரப்பும் பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டும். கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.