Publish Date: Fri, 25 Jun 2021 (16:23 IST)
Updated Date: Fri, 25 Jun 2021 (16:29 IST)
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அரசின் உத்தரவுப்படி மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பீட்டு முறையை வகுத்து ஜூலை 31 ஆம் தேதிக்குள் அறிவிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாநில பாடத்திட்டங்களில் உள்ள மாநிலங்கள் சிலவும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின் தேர்ச்சி அறிவித்தன.நேற்று ஆந்திர மாநில அரசு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
ஆனால் மாணவர்களுக்கு மதிப்பெண் அளிக்கும் முறை குறித்து அவை விளக்கம் அளிக்காமல் உள்ளன. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநில பாடத்திட்டத்தை கொண்ட மாநிலங்களுக்கு புதிய உத்தரவை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. அதன்படி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து 10 நாட்களுக்குள் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வரும் ஜூலை மாதம் 31 ஆம் தேதிக்குள் பிளஸ் 2 மாணவர்களுக்கான முடிவை அறிவிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ்2 மாணவர்களின் கல்லூரி மற்றும் உயர்கல்வியில் சேரும்பொருட்டு இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.