Publish Date: Fri, 28 Sep 2018 (07:11 IST)
Updated Date: Fri, 28 Sep 2018 (07:14 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தரவுள்ள இந்த தீர்ப்பை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.
உலகப்புகழ் பெற்ற சபரிமலை கோவிலில் அனைத்து வயது ஆண்கள் அனுமதிக்கப்படும் நிலையில் பெண்களுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் உள்ளது. குறிப்பாக 10 வயது சிறுமி முதல் 50 வயது பெண்கள் வரை சபரிமலை கோவிலில் அனுமதிக்கப்படுவதில்லை. கடவுளின் முன் அனைவரும் சமம் என்றும், அனைத்து வயது பெண்களையும் வழிபாடு செய்ய கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க ஆட்சேபணை இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு கூறியிருந்தாலும் கோவிலின் தேவஸ்தானம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடியது. இந்த வழக்கில் வாத, எதிர்வாதங்கள் முடிந்துள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது.