மேகாலயாவில் இந்தூர் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரை காதல் விவகாரம் காரணமாக கொலை நடந்ததாக கருதப்பட்ட நிலையில், தற்போது அவரது மனைவி சோனமின் சகோதரர் கோவிந்த் ரகுவன்ஷி மீது சந்தேகம் எழுந்துள்ளது. இந்தூர் குற்றப்பிரிவு போலீசார் கோவிந்தை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இந்த கொலை வழக்கு ஹவாலா வர்த்தகம் தொடர்பானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனமின் காதலன் ராஜ் குஷ்வாஹாவின் மொபைலில் இருந்து, ஹவாலா பரிவர்த்தனைகளுக்கான ரகசிய குறியீடுகளாக பயன்படுத்தப்பட்ட கிழிந்த 10 ரூபாய் நோட்டுகளின் படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ராஜ் குஷ்வாஹா விசாரணையில், சோனம் மற்றும் கோவிந்துடன் இணைந்து ஹவாலா வர்த்தகத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். அவர்களது உறவினர் ஜிதேந்திர ரகுவன்ஷியின் வங்கிக் கணக்குகள் மூலம் பல லட்சம் ரூபாய் பரிவர்த்தனைகள் நடந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. சில கணக்குகளில் ₹14 லட்சம் வரையிலான பணம் டெபாசிட் மற்றும் எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.
இந்த ஹவாலா ஆவணங்கள் அமலாக்கத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பணமோசடி கோணத்தில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. கோவிந்தின் அலுவலகம் மற்றும் குடோனில் சோதனை நடத்தப்பட்டு, சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரது ஊழியர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.
கோவிந்த், சோனமுடனான தனது உறவை முறித்து கொண்டதாக அறிவித்தாலும், அவரது வணிக நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த கொலை மர்மம் மேலும் சிக்கலாகி வருகிறது.