Publish Date: Thu, 03 Oct 2019 (20:42 IST)
Updated Date: Thu, 03 Oct 2019 (20:46 IST)
’வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் ஒரு காட்சியில் சூரி ஒரு கடையில் பரோட்டா சாப்பிட செல்வார். பரோட்டாவை வைத்துவிட்டு சால்னா எடுத்து வருவதற்குள் மொத்த பரோட்டாவையும் காலி செய்திருப்பார். படத்தில் வேண்டுமானால் அப்படி நடக்கும் நிஜத்தில் நடக்குமா? நடத்தி காட்டியிருக்கிறார் ஒரு பாட்டியம்மா!
மைசூரில் தசரா பண்டிகையை முன்னிட்டு உணவு திருவிழா ஒன்று நடைபெற்றது. அதில் ஒரு பெண்களுக்கான போட்டி! போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் 6 இட்லிகள் வைப்பார்கள். யார் முதலில் அனைத்து இட்லிகளையும் தின்று முடிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள். அதற்கு பரிசும் உண்டு.
இளம்பெண்கள் முதற்கொண்டு பலர் கலந்து கொண்ட இந்த போட்டியில் அமைதியாக ஓரமாக அமர்ந்திருந்தார் ஹுலுவாலியை சேர்ந்த சரோஜாம்மாள். போட்டி தொடங்கி எல்லாரும் ஒரு இட்லி தின்று முடிப்பதற்குள் மளமளவென 6 இட்லிகளையும் உள்ளே தள்ளி பார்வையாளர்களை திகைக்க செய்தார் சரோஜம்மாள்.
நிமிடத்திற்குள் ஆறு இட்லிகளை விழுங்கிய சரோஜம்மாவின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.