அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த நிலையில் இசையமைப்பாளர் ஒருவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 12ம் தேதி அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில் விமானத்தில் பயணித்த பயணிகள் மட்டுமல்லாமல், விமானம் விழுந்த இடத்தில் வசித்தவர்களும் பலியான சோகம் நிகழ்ந்தது. தற்போது இந்த விபத்தில் பலியானவர்களின் டிஎன்ஏ சோதனை மூலம் அவர்கள் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விமான விபத்து நடந்த நேரத்தில் தனது கணவர் அங்கு இருந்ததாகவும், அவரை காணவில்லை என்றும் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். மகேஷ் ஜிராவாலா என்ற தனது கணவர் மாயமானதாக அவர் புகார் அளித்துள்ளார்.
ஆல்பம் பாடல்களுக்கு இசையமைப்பவரான மகேஷ் ஜிராவாலா அன்று அந்த பகுதியில் பாடல் இசையமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், விபத்திற்கு முன்பு மனைவியிடம் பேசியுள்ளார். ஆனால் விமான விபத்திற்கு பிறகு அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதுத்தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் “என் கணவர் மதியம் 1.14 மணிக்கு என்னை அழைத்து, அவரது சந்திப்பு முடிந்து வீடு திரும்பி வருவதாகக் கூறினார். இருப்பினும், அவர் திரும்பி வராததால், நான் அவரது தொலைபேசியில் அழைத்தேன், ஆனால் அது அணைக்கப்பட்டிருந்தது. போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகு, அவரது மொபைல் போனின் கடைசி இருப்பிடம், விபத்து நடந்த இடத்திலிருந்து 700 மீட்டர் தொலைவில் இருப்பதைக் காட்டியது.” எனக் கூறியுள்ளார்.
விபத்து நடந்து 4 நாட்களாகியும் மகேஷின் உடல் விமான விபத்து பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் அவர் என்னவானார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Edit by Prasanth.K