முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு கடிதம் ஒன்றை யாகூப் ஹபீபுதீன் எழுதியுள்ளார். இவர், முகலாய வம்சத்தைச் சேர்ந்த கடைசி பேரரசரான பகதூர் ஷா ஜாபரின் வாரிசு எனக் கூறப்படுகிறார்.
ஒளரங்கசீப் கல்லறையை பாதுகாப்பதற்கான அவசியம் குறித்து யாகூப் ஹபீபுதீன் எழுதிய கடிதத்தில், "1958ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 'நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்களை பாதுகாக்கும் சட்டம்' படி, ஔரங்கசீப்பின் கல்லறை அரசு பாதுகாப்பு பெற்ற நினைவுச்சின்னமாகும். எனவே, அதை அகற்றவோ அல்லது அதில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளவோ முடியாது. அத்தகைய முயற்சிகள் சட்டபடி குற்றமாகும்," என அவர் தெரிவித்தார்.
மேலும், "திரைப்படங்கள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வரலாற்று உண்மைகள் திருப்பிச் சித்தரிக்கப்படுவதால், மக்களிடையே தவறான புரிதல்கள் ஏற்பட்டு, தேவையற்ற போராட்டங்கள், வெறுப்பை ஊட்டும் செயல்கள், உருவ பொம்மைகளை எரிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக, சர்வதேச சட்ட விதிகளின் அடிப்படையில், இந்திய அரசும் தொல்லியல் துறையும் உரிய நடவடிக்கைகளை எடுக்க ஐ.நா. உத்தரவிட வேண்டும்," என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.