Publish Date: Tue, 04 Feb 2020 (09:35 IST)
Updated Date: Tue, 04 Feb 2020 (09:36 IST)
உலகத்தையே இந்துத்துவாவாக மாற்ற வேண்டும் என பேசிய பாஜக எம்.பி அனந்தகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த் புத்தக வெளியீடு விழா ஒன்றில் பாஜக எம்.பி அனந்தகுமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் காந்தியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். சுதந்திர போராட்டத்திற்காக பலர் ஆயுதமேந்தி போராடியபோது ஒரு சிலர் மட்டும் ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு போராடி கொண்டிருந்தனர். அவர்கள் ஆங்கிலேயரிடம் அடி, உதை வாங்கவில்லை. அவர்கள்தான் இன்று சுதந்திர போராட்ட வீரர்கள் என்று பேசியுள்ளார் அனந்தகுமார்.
அவரின் இந்த பேச்சுக்கு கர்நாடக மாநில காங்கிரஸார் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அனந்தகுமார் பெங்களூருவை இந்துத்துவா தலைநகராக மாற்ற வேண்டும் என்றும், உலகையே இந்துத்துவாவாக மாற்ற வேண்டும் என்றும் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக இந்துத்துவ போக்கோடு செயல்படுவதாக பல கட்சிகள் சாடி வரும் நிலையில் அதற்கு ஆதாரம் தருவது போல அனந்த குமார் பேசியிருப்பது மேலிடத்தை கோபப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அவரது பேச்சுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாஜக.