Publish Date: Sat, 07 Sep 2019 (09:00 IST)
Updated Date: Sat, 07 Sep 2019 (11:11 IST)
சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தரைதளத்தைத் தொடும்போதே தனது தொடர்பை இழந்தது. இதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் வழங்கும் வகையில் பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது தாய் நாட்டுக்காக வாழ்கின்ற இஸ்ரோ விஞ்ஞானிகளை பார்த்து நாடே பெருமை கொள்கிறது. நமது தாய்நாட்டிற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் தூக்கமின்றி உழைத்து வருகின்றனர். கடைசி வரை சந்திரயான் 2 வுக்காக உழைத்ததற்கு நன்றி” என தனது நன்றிகளை தெரிவித்தார்.
அதன் பின்பு, ”கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமல்ல, நமது விண்வெளி திட்டம் குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளவேண்டும், நாட்டின் வளர்ச்சிக்காக நம்ப முடியாத அளவுக்கு பணியாற்றியுள்ளீர்கள். இது வரை யாரும் முயற்சிக்காததை நீங்கள் முயற்சி செய்துள்ளீர்கள், நமது விண்வெளி திட்டத்தில் இனிதான் பல உச்சங்கள் வரவுள்ளன. நானும் நாடும் உங்களுடனே இருப்போம்” எனவும் ஆறுதல் கூறினார். பிரதமர் மோடி உரையாற்றியபோது விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.