மோடியை சந்திக்க போய் நடுரோட்டில் நின்ற அதிமுக எம்.பி.க்கள் : டெல்லியில் பரபரப்பு
மோடியை சந்திக்க போய் நடுரோட்டில் நின்ற அதிமுக எம்.பி.க்கள் : டெல்லியில் பரபரப்பு
காவிரி விவகாரம் தொடர்பாக, பிரதமரை சந்திக்க சென்ற அதிமுக எம்.பி.க்களை நடுரோட்டில் நிற்க வைத்து மத்திய அரசு வேடிக்கை பார்த்துள்ளது.
காவிரி நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றம் 3 முறை உத்தரவிட்டும், கர்நாடக அரசு அதை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. செப் 29ம் தேதி, டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
அதன்பின், இருமாநில பேச்சுவார்த்தை விவரங்களை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது, வருகிற அக்டோபர் 4ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கூடாது என்று கர்நாடக அரசு தொடர்ந்து கூறிவருகிறது.
இந்நிலையில், உச்சநீதிமனத்தின் தீர்ப்பை ஏற்பதாக கூறிய மத்திய அரசு, தீடீரென, மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இது தமிழகத்திற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
எனவே, இது தொடர்பாக மோடியை சந்திப்பது என முடிவெடுத்த அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் இன்று டெல்லியில் பேரணியாக பிரதமர் அலுவகம் நோக்கி சென்றனர். ஆனால், பிரதமர் அலுவலம் வந்ததும், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.
தம்பிதுரை உட்பட 7 எம்.பி.க்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால், மக்கள் பிரதிநிதிகளாகிய எங்கள் அனைவரையும் பிரதமரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுத்தனர்.
ஆனால், பிரதம அலுவலக அதிகாரிகள், அதிமுக எம்.பி.க்களை நடுரோட்டிலேயே நிற்க வைத்தனர். இது ஒட்டு மொத்த தமிழகத்தை அவமதிக்கும் செயல் என அதிமுக எம்.பிக்கள் கொந்தளித்தனர்.