Publish Date: Sat, 14 Mar 2020 (08:47 IST)
Updated Date: Sat, 14 Mar 2020 (08:48 IST)
கொரோனா உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் சார்க் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மோடி.
கடந்த டிசம்பர் மாதத்தில் பரவ தொடங்கியா கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களை பலிக்கொண்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தெற்காசிய சார்க் கூட்டமைப்புக்கு பிரதமர் மோடி கொரோனாவை தடுக்க அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர் “தெற்கு ஆசியா உலக மக்கள் தொகையில் குறிப்பிடத்தகுந்த அளவு மக்களின் இருப்பிடமாக இருக்கிறது. எனவே மக்களின் ஆரோக்கியத்திற்காக நாம் எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். சார்க் நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள வலிமையான திட்டத்தை உருவாக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இதுகுறித்து நாம் காணொளி மூலமாக கலந்துரையாடுவோம்” என கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த முயற்சிக்கு பலநாட்டு தலைவர்களும் வரவேற்பு அளித்துள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்ஷே, மாலத்தீவு அதிபர் உள்ளிட்டவர்கள் காணொளியில் பங்கேற்கவும், மக்களை காக்கவும் தயாராய் இருப்பதாக கூறியுள்ளனர்.
சார்க் அமைப்பில் உள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், பூடான் உள்ளிட்ட மற்ற நாடுகளும் பிரதமரின் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கை அழைப்பை ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.