Publish Date: Mon, 21 Dec 2020 (13:16 IST)
Updated Date: Mon, 21 Dec 2020 (13:18 IST)
இன்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஆதரவற்ற சிறுமியை தத்தெடுத்துள்ளார் எம்.எல்.ஏ ரோஜா.
ஆந்திராவின் முதல்வராக பதவியேற்று சிறப்பாக செயல்பட்டு வரும் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் இன்று அவரது கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை சேர்ந்தவரும், நடிகையும், நாகரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜா, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிறந்தநாளில் ஆதரவற்ற சிறுமியை தத்தெடுத்துள்ளார். பெற்றோர்கள் இல்லாமல் அரசு பெண்கள் காப்பகத்தில் வசித்து வரும் புஷ்பகுமாரி என்ற மாணவியை தத்தெடுத்து, அந்த சிறுமியின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்பதாக அறிவித்துள்ளார் எம்.எல்.ஏ ரோஜா. அவரது இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.