Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்களவையில் பேசினால் மட்டும் பத்தாது! – மோடிக்கு கடிதம் எழுதிய மணிரத்னம்

மக்களவையில் பேசினால் மட்டும் பத்தாது! – மோடிக்கு கடிதம் எழுதிய மணிரத்னம்
, புதன், 24 ஜூலை 2019 (18:29 IST)
இந்தியாவில் தற்போது அதிகரித்துவரும் சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கேள்வி எழுப்பி கடிதம் ஒன்றை இயக்குனர் மணிரத்னம், ரேவதி உட்பட்ட 49 கலைஞர்கள் கையெழுத்திட்டு பிரதமருக்கு அனுப்பியுள்ளனர்.

இந்தியாவில் இஸ்லாமிய, தலித் மற்றும் சிறுபான்மையின மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை கண்டித்தும், அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, மலையாள இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன், இந்தி இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யம், வரலாற்று ஆராய்வாளர் மற்றும் எழுத்தாளர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்களாக போற்றப்படும் 49 பேர் விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்கள்.

சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் “ஜெய்ஸ்ரீ ராம்” என சொல்ல சொல்லி ஒருவரை அடித்து துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வெளியானது. உத்தர பிரதேசத்தில் நில பிரச்சினையில் பழங்குடி இன மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் “ இந்திய தேசத்தில் சாதி, மத, இன பாகுபாடுகளை தாண்டி அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்கிற இறையாண்மையை ஏற்று வாழும் இந்தியர்கள் நாங்கள். சமீப காலமாக இஸ்லாமியர்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மை இனத்தவர் மீது கடவுள்களின் பெயராலும், சமூக அடிப்படையிலும் தொடுக்கப்படு வன்முறைகள் கண்டிக்கப்பட வேண்டியது. முக்கியமாக ராமரின் பெயரால் சிறுபான்மையின மக்கள் மீது வன்முறையை ஏவுவது நிறுத்தப்பட வேண்டும்.

இதுபற்றி திரு.பிரதமர் அவர்கள் மக்களவையில் பேசுவதால் மட்டும் ஒன்றும் நடந்துவிட போவதில்லை. வன்முறையாளர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? குறைந்தபட்சம் பெயிலில் வர முடியாத அளவுக்கு சிறை தண்டனையாவது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
webdunia

ஒரு கருத்துக்கு எதிர் கருத்து இல்லாவிட்டால் அது ஜனநாயகமே இல்லை. எதிர்கருத்து கூறுபவர்களை “ஆண்டி இந்தியன்”, “நக்சல்” என்று முத்திரை குத்துவதை நிறுத்த வேண்டும். இந்திய சட்டம் விதி 19ன் படி ஒரு இந்திய குடிமகன் தான் விரும்பிய கருத்துகளை, எதிர் கருத்துகளை கூற முழுமையான சுதந்திரம் உண்டு.

இந்த கடிதத்தை ஏற்று இது குறித்த நடவடிக்கைகளை உடனடியாக முடுக்கிவிட்டு இந்திய இறையாண்மையை காப்பீர்கள் என்று நம்புகிறோம்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிளாஸ்டிக் குப்பைக்கு இலவச உணவு : அரசின் திட்டத்துக்கு மக்களிடம் மவுசு