மதுபானம் மற்றும் நீச்சல் குளம் வசதியுடன் திருமலை திருப்பதியில் சொகுசு ஹோட்டல் கட்ட, திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஒய்.எச்.ஆர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், திருமலை திருப்பதியில் சொகுசு ஓட்டல் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. 100 அறைகளைக் கொண்ட இந்த ஓட்டலில் மதுக்கூடம், ரெஸ்டாரன்ட், நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகள் இருப்பதாகவும், 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் இந்த ஓட்டலை 2027 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருப்பதியில் ஐந்து நட்சத்திர ஓட்டல் பயன்பாட்டுக்கு வந்தால், அங்கு அசைவ உணவு பரிமாறப்படும்; இதனால் திருப்பதியின் புனித தனம் கெட்டுவிடும் என்று திருமலை தேவஸ்தானம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும் ஹோட்டலுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஹோட்டலுக்கு வழங்கப்பட்ட நிலத்தை மீண்டும் கோவில் நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்து வருகிறது.
திருப்பதி பாலாஜி கோயிலுக்கு செல்லும் பாதையில் சொகுசு ஹோட்டல் இருப்பதை பக்தர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே, இந்த ஹோட்டல் கட்டுவதை அனுமதிக்க முடியாது என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு தலைவர் வி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.