Publish Date: Sat, 30 May 2020 (07:27 IST)
Updated Date: Sat, 30 May 2020 (07:34 IST)
வெட்டுக்கிளி பரவல் தமிழகத்தில் அதிகமாகியுள்ள நிலையில் விமானப் போக்குவரத்துக்கும் அவை இடைஞ்சலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள் படைகள் ஊடுருவி, பயிர்களை தேசம் செய்து வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் தற்போது பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் மாநிலத்தில் அதிகமான அளவில் பரவி உள்ளது. தமிழகத்தில் கூட கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் கூட்டம் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.
இதனால் நாடெங்கும் உள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இந்த வெட்டுக்கிளிகள் கூட்டத்தால் விமானப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. விமானிகள் மற்றும் இன்ஜினீயர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் (DGCA) சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதில் விமானத்தை டேக் ஆப் செய்யும்போது வெட்டுக்கிளிகளின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டால் மற்ற விமானங்களுக்கும் தகவலைப் பரப்ப வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. மிகச்சிறிய வெட்டுக்கிளிகள் கூட, விமான கண்ணாடியில் மோதி விமானியின் பார்வையை பாதிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.