Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறையில் சசிகலாவிற்கு அளிக்கப்படும் சலுகைகள் என்னென்ன தெரியுமா?

சிறையில் சசிகலாவிற்கு அளிக்கப்படும் சலுகைகள் என்னென்ன தெரியுமா?
, ஞாயிறு, 16 ஜூலை 2017 (09:21 IST)
சிறையில் உள்ள சசிகலாவிற்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து வெளியே செய்திகள் சசிந்துள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக சில சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா கடந்த  14ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார்.  
 
அதன் பின் அவர் மீண்டும் நேற்று சிறைக்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது சில அதிகாரிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  மேலும், அவருக்கு எதிராக சில கைதிகள் கோஷம் எழுப்பினர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரூபா, சிறையில் தான் எடுத்த வீடியோக்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக குற்றம் சாட்டினார்.

webdunia

 

 
இந்நிலையில், பணத்தை பெற்றுக்கொண்டு சசிகலாவிற்கு சிறையில் அளிக்கப்படும் சிறப்பு சலுகைகள் பற்றி செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
சசிகலா, இளவரசி மற்றும் திவாகரன் ஆகியோருக்கு சிறை உணவு கிடையாது. சசிகலா உள்ளிட சில விஐபி கைதிகளுக்காகவே அதிநவீன மாடுலர் சமையல் அறை அங்கே செயல்படுகிறது. அதில் விதவிதமான உணவுகள் அவர்களுக்காகவே தயாரிக்கப்படுகிறது. அல்லது வெளியே இருந்து சமையல் செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு வரப்படுகிறது.
 
சிறையில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் என ராகேஷ் மற்றும் புட்டா என்கிற 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்தான் லஞ்சம் பெறும் அதிகாரிகளுக்கு இடது மற்றும் வலது கரங்களாக செயல்படுகின்றனர். சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோரை ஸ்பெஷலாக கவனிப்பது, அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வது, நொறுக்கு தீனிகள் வழங்குவது அத்தனையும் ராகேஷ் கவனித்துக்கொள்கிறார்.
 
சிறை தலைமை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் அனிதா ஆகியோர் சசிகலாவிற்கு மிகவும் நெருக்கமானவர்கள் ஆவர். நெருக்கம் என்றால் அவர்களது அறையில் சசிகலா மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் அளவிற்கு நெருக்கம். அந்த நெருக்கம்தான், சிறையில் இருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் உள்ள பிரிட்டானியா அடுக்குமாடி குடியிருப்பிற்கு 3 முறைக்கு மேலாக சசிகலா சென்று வர உதவி புரிந்துள்ளது. 

சசிகலா உள்ளிட்ட விஐபி கைதிகளுக்கு செல்போன் உட்பட மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய ஆனந்தி என்ற பெண் கைதி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
சிறை விதிமுறைகளை மீறி பலர் சசிகலாவை அடிக்கடி சந்தித்து வருகின்றனர். அவரை பார்க்க வருபவர்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டதோடு, அங்கே இருக்கை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இதை டிஐஜி ரூபாவே, உயர் அதிகாரிக்கு அனுப்பிய 2வது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
 
ஒவ்வொரு அதிகாரிகளும் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு சசிகலா உள்ளிட்ட சில கைதிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளனர். இதைத்தான் டிஐஜி ரூபா புகாராக கூறியுள்ளார். தற்போது இந்த விவகாரம் வெளியே தெரியவந்ததும், அனைத்து ஆதாரங்களையும் சிறை அதிகாரிகள் அழித்து விட்டதாக கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயதில் சிறியவரை ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை...