Publish Date: Thu, 17 May 2018 (10:54 IST)
Updated Date: Thu, 17 May 2018 (10:56 IST)
மோடி தலைமையிலான மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அனைவரையும் மிரட்டி வருகிறது என மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், கர்நாடகாவின் 23வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.
இதனை எதிர்த்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தின் முன்பு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அரசியல் சாசனத்திற்கு எதிரான செயல் என்றும் பாஜகவின் இந்த கீழ்த்தரமான செயலை மக்களிடத்தில் எடுத்து கூறுவோம் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார். ரிசார்டில் தங்க வைக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தள அமைச்சர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி “பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. வருமானத்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை காட்டி எம்.எல்.ஏக்களை மிரட்டி வருகிறது. காங்கிரஸ்-மஜத எம்.எல்.ஏக்களுக்கு பாஜக நெருக்கடி கொடுத்து வருகிறது. இதைக்கண்டித்து சட்டசபையிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணை செல்ல இருக்கிறோம். எங்கள் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.