Publish Date: Sat, 20 Oct 2018 (19:38 IST)
Updated Date: Sat, 20 Oct 2018 (19:48 IST)
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்ததை அடுத்து நேற்று பெண் பத்திரிகையாளர் கவிதாவும், அவருடன் பாத்திமா என்பவரும் சபரிமலையில் உள்ள ஐயப்பன் சன்னிதானம் அருகே வரை சென்றனர். ஆனால் சன்னிதானத்திற்குள் செல்ல அவர்களுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இதுகுறித்து கவிதா அறிக்கை ஒன்றில் கூறியதாவ்து:
என்னை சபரிமலை ஐயப்பன் சன்னிதிக்குள் செல்ல விடாமல் சில சமூக விரோதிகள் தடுத்துவிட்டன. நான் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கி செல்வதற்கு கேரள அரசும், கேரள போலீசாரும் முழு ஒத்துழைப்பும், பாதுகாப்பும் அளித்தனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் நான் சன்னிதானத்தை நெருங்கியபோது சில சமூக விரோதிகள் என்னை மேற்கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.
முதலில் எனக்கு பாதுகாப்பு கொடுத்த போலீசார் திடீரென கடைசி நிமிடத்தில் என்னை கைது செய்து வலுக்கட்டாயமாக அந்த இடத்தில் இருந்து வெளியேற்றி விட்டனர். நான் ஒரு பத்திரிகையாளர். அந்த வகையில் சபரிமலைக்கு சென்று நான் எனது கடமையைத்தான் செய்தேன். சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு, சபரிமலையில் எப்படி அமல்படுத்தப்படுகிறது என்ற செய்தியை சேகரிக்கவே வந்தேன்.
மேலும் வாய்ப்பு கிடைத்தால் சபரிமலைக்கு மீண்டும் செல்வேன். பத்திரிகையாளர் என்ற முறையில் அங்கு என் கடமையை செய்யவும் தவற மாட்டேன்' என்று கவிதா தெரிவித்துள்ளார்.