Publish Date: Mon, 05 Jul 2021 (12:01 IST)
Updated Date: Mon, 05 Jul 2021 (15:37 IST)
கர்நாடகா அரசு அமல்படுத்தவிருக்கும் மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமார்.
காவிரியில் மேகேதாட்டு அணை திட்டத்தை ரூ. 9000 கோடி மதிப்பில் செயல்படுத்த கர்நாடகா அரசு உத்தேசித்துள்ளது. கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமார், தமது ட்விட்டர் பக்கத்தில் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
அதில், நீர் ஆதாரம் கொண்ட மாநிலம், அந்த நதி நீர் பாய்ந்தோடும் மாநிலத்தில், தனது திட்டங்களுக்காக அனுமதி பெறத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி கூறியுள்ளது.
எனவே, கர்நாடகா முதல்வர், தமிழக முதல் அமைச்சரிடம் அனுமதி கோருவது சரியானதல்ல. கர்நாடகா முதல்வரிடம் அரசியல் நலன்கள் தெளிவற்று உள்ளதன் பிரதிபலிப்பே இது என்று அவர் கூறியுள்ளார்.