பாகிஸ்தான் தீவிரவாதத்தை தொடர்ந்தால், அந்த நாட்டின் உள்பகுதி வரை சென்று மீண்டும் தாக்குதல் நடத்துவோம்," என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் நிலைகுலைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் உள்ளே சென்று நமது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெல்ஜியம் சென்ற நிலையில், அங்குள்ள செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார். அப்போது, "பாகிஸ்தான் இன்னும் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்றும், இனிமேல் எங்களால் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாது என்றும், இனிமேல் பாகிஸ்தான் பயங்கரவாத செயலில் ஈடுபட்டால் பாகிஸ்தானின் உள்பகுதி வரை சென்று தாக்குவோம்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"பாகிஸ்தானுடனான மோதலில் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புகளை விட பாகிஸ்தான் விமானப்படைக்கு சேதங்கள் மிக அதிகம் என்றும், பாகிஸ்தானின் எட்டு விமானப்படை தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது," என்றும் அவர் இன்னொரு கேள்விக்குப் பதில் அளித்தார்.
"பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுக்கு அனைத்து நாடுகளும் ஆதரவளித்து வருகிறது என்றும், குறிப்பாக பெல்ஜியம் அரசு எங்களுக்கு முழு ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி," என்றும் அவர் தெரிவித்தார்.