நாக்பூர் நெடுஞ்சாலையில் ஒருவர் தனது மனைவியின் சடலத்தை பைக்கில் கட்டி தொங்கவிட்டப்படி ஓட்டிச் சென்ற சம்பவத்தை தொடர்ந்து அவரை பிடித்து போலீஸார் விசாரித்தபோது அதிர்ச்சிக்குரிய சோகக்கதை தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள லோனாரா பகுதியில் வசித்து வருபவர் அமித் பும்ரா யாதவ், இவரது மனைவி கியார்ஷி. அமித் பும்ராவின் சொந்த ஊர் மத்திய பிரதேசத்தில் உள்ளது. அன்று அமித் பும்ரா தனது மனைவியுடன் சொந்த ஊரான மத்திய பிரதேசத்தில் உள்ள கரன்பூருக்கு சென்றுள்ளார்.
நாக்பூர் - ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்றுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். லாரியும் நிற்காமல் சென்றுவிட்டது. கியார்ஷி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மனைவியை கண்டு கதறி அழுத அமித் பும்ரா அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி உதவி கேட்க முயன்றுள்ளார். ஆனால் யாரும் வாகனத்தை நிறுத்தவில்லை.
இதனால் விரக்தியடைந்த அவர் மனைவியின் உடலை தனது பைக்கிலேயே கட்டிக் கொண்டு வீட்டிற்கு எடுத்து செல்ல முயன்றுள்ளார். அப்போது போலீஸ் அவரை பிடித்துள்ளனர். இந்த சம்பவத்தை கேட்டு சோகத்தில் ஆழ்ந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரின் மனதையும் கலங்க வைத்துள்ளது.
Edit by Prasanth.K