Publish Date: Tue, 23 Jul 2019 (15:02 IST)
Updated Date: Tue, 23 Jul 2019 (15:03 IST)
சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது தொடர்பாக மகிழ்ச்சியைத் தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அதோடு ஒரு சர்ச்சையையும் கிளப்பியுள்ளார்.
நிலவினை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலம், கடந்த 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் நிறுத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கோளாறுகளை சரிசெய்த நிலையில் நேற்று மதியம் சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டது.
இதை முன்னிட்டு சிறப்பாக சந்திராயன் 2 வை விண்ணில் ஏவிய இஸ்ரோவுக்கு இந்தியாவில் இருந்து பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதுசம்மந்தமாக மகிழ்ச்சியைத் தெரிவித்த ஹர்பஜன் ‘சில நாடுகள் தங்கள் கொடிகளில் நிலவைக் கொண்டுள்ளன. ஆனால் சில நாடுகள் நிலவில் தங்கள் கொடியை வைத்துள்ளன’ எனத் தெரிவித்து அந்நாட்டு கொடிகளையும் பதிவு செய்திருந்தார்.
பாகிஸ்தான், துருக்கி, துன்ஸியா, லிபியா, அஸர்பைஜான், அல்ஜீரியா, மலேசியா, மாலத்தீவுகள், மௌரிட்டானியா உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகள் பிறையைக் குறிக்கும் விதமாக தங்கள் நாட்டுக் கொடிகளில் நிலவினை வைத்துள்ளன. அதனால் அவற்றை விமர்சிப்பது சரியானதல்ல என்று சமூகவலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.