Publish Date: Mon, 16 Apr 2018 (11:24 IST)
Updated Date: Mon, 16 Apr 2018 (18:23 IST)
காஷ்மீரில் சிறுமி ஆஷிபா கொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், குஜராத்தில் அது போன்ற ஒரு சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து சிலர் அவரை சீரழித்துள்ளனர். இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து நாடெங்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இதன் பாதிப்பு அடங்குவதற்குள் குஜராத் மாநிலம் சூரத்திலும் இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. கடந்த 6ம் தேதி சூரத் நகரில் பஹிஸ்தான் கிரிக்கெட் மைதானம் அருகே உடலில் காயங்களோடு 9 வயது சிறுமி பிணமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் உடலில் 81 காயங்கள் இருந்தது. மேலும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், கழுத்து நெரிக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
ஆனால், அந்த சிறுமியின் பெற்றோர்கள் யார் என இன்னும் தெரியவில்லை. எனவே, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடெங்கும் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.