Publish Date: Sun, 17 Dec 2017 (11:30 IST)
Updated Date: Sun, 17 Dec 2017 (11:34 IST)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சட்டசபை அருகே முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. மகன் சுட்டு கொல்லப்பட்டார். இச்சம்வம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பிரேம் பிரகாஷ் திவாரி. இவருக்கு வைபவ் திவாரி என்ற மகன் உள்ளார். இவரது வீடு உத்திரபிரதேசம் சட்டசபைக்கு அருகே உள்ளது. நேற்று இரவு வைபவ் வீட்டின் கதவை மர்ம நபர்கள் தட்டியுள்ளனர். வைபவ் சென்று வீட்டின் கதவை திறக்கவே அங்கிருந்த மர்ம நபர்கள் வைபவை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த வைபவ் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் வைபவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் இந்த கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டசபை அருகிலேயே முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ வின் மகன் சுட்டு கொல்லப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.