Publish Date: Wed, 15 May 2019 (06:53 IST)
Updated Date: Wed, 15 May 2019 (06:57 IST)
மக்களவை மற்றும் ஒருசில மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலை அடுத்து நாடு முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் பல இடங்களில் சோதனை செய்து வரும் நிலையில் நேற்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தங்கியிருந்த ஓட்டலி்லும் திடீரென சோதனை செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நேற்று சட்டமன்ற இடைத்தேர்தல் ஒன்றின் பிரச்சாரத்திற்காக ஹூபாளிக்கு வந்தபோது அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது அந்த ஓட்டலில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக தகவல் பரவியது. ஆனால் வருமான வரித்துறையினர் தாங்கள் சோதனை நடத்தவில்லை என்றும் தேர்தல் பறக்கும் படையினர் தான் அதிரடி சோதனை நடத்தியதாகவும் இன்னொரு தகவல் கூறுகின்றது.
இது குறித்து கருத்து தெரிவித்த குமாரசாமி என்னுடைய அறையில் சோதனை நடத்தியதில் தவறில்லை. ஆனால் பாஜகவினர் தங்கியுள்ள அறைகளிலும் சோதனையை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். கூட்டணியான காங்கிரஸ் கட்சியும் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த சோதனைகள் நடைபெற்றதாக கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலும் மதுரையில் அமமுகவினர் தங்கியிருந்த விடுதியிலும், தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் தங்கவிருந்த விடுதியிலும் பறக்கும் படையினர் சோதனை செய்தனர் என்பதும், ஆனால் அதிமுக, பாஜக தலைவர்கள் தங்கிய விடுதிகளில் இதுவரை சோதனை செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது