Publish Date: Mon, 09 Dec 2019 (11:14 IST)
Updated Date: Mon, 09 Dec 2019 (11:16 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்கும் கூடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஆந்திரா மாநிலம் திருமலை திருப்பதியில் ஏழுமலையான் கோவிலுக்கு உலகில் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர். இங்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்கும் கூடத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் லட்டு தயாரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் மிகவும் பதற்றமடைந்தனர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
லட்டு தயாரிக்கும் போது எண்ணெய் வெளியே சிதறி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கூடத்தின் சுவர்களில் ஏற்கனவே எண்ணெய் படலம் படிந்திருந்ததால் தீ எளிதாக பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.