Publish Date: Mon, 29 Jun 2020 (09:12 IST)
Updated Date: Mon, 29 Jun 2020 (09:13 IST)
மத்திய அரசின் அனுமதியின்றி கொரோனா மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி விற்பனை செய்த பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் அதை தடுப்பதற்கான மருந்துகளை கண்டுபிடிக்க உலக நாடுகள் முழுவதும் ஆய்வாளர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிலர் சித்த வைத்திய முறையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்திடம் அனுமதி பெறாமல் சித்த மருந்துகளை விற்கக்கூடாது என்றும் சட்டம் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் பிரபலமாக உள்ள பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக “கொரோனில்” என்ற மருந்தை விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால் இந்த மருந்து ஆயுஷ் அமைச்சகத்தின் அனுமதி பெறாதது என்பதால் பல்வேறு மாநிலங்கள் இந்த மருந்தை விற்பனை செய்ய தடை விதித்துள்ளன.
இந்நிலையில் எந்த விதமான அனுமதியும், ஆதாரங்களுமின்றி கொரோனா மருந்து விற்று வருவதாக பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலில் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.